நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 21-10-2019 | 4:49 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இன்று (21) பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கிரிந்திவெல பகுதியில் 93 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹாவில் 83 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கேகாலையில் 83 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் இரத்தினபுரியில் 76 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கொழும்பில் 53 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. பலத்த மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிறுவகத்தின் மண்சரிவு கண்காணிப்புப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.