இந்த மாதத்தில் 4155 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த மாதத்தில் 4155 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவு

by Fazlullah Mubarak 21-10-2019 | 10:32 AM

Colombo (News 1st) மட்டக்களப்பு - ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி 21 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 894 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம் இந்த மாதத்தில் 4155 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மழையுடனான வானிலையால் நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள், தமது சுற்றுச்சூழலைத் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்