பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் தாமதம்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் தாமதம்

by Staff Writer 20-10-2019 | 8:36 AM
Colombo (News 1st) பிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமாகியுள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்றதுடன் இதில் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 306 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஒன்றியத்திடம் கால அவகாசம் பெறவேண்டிய நிலையை போரிஸ் ஜோன்சன் எதிர்நோக்கியுள்ளார். எவ்வாறாயினும், தான் தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்காக எந்தவித அச்சமுமின்றி தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானியா அறிவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளில் சனிக்கிழமை ஒன்றில் பிரித்தானிய பாராளுமன்றம் கூடியமை இதுவே முதல்தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்பார்த்த நிலையில், விவாதங்களின் பின்னர் தனிப்பட்ட உறுப்பினர் ஒலிவர் லெட்வின் அறிமுகப்படுத்திய தீர்மானத்துக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என அழுத்தமாகத் தெரிவித்த பிரதமருக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாகக் காணப்படுகின்றது.