மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

by Staff Writer 19-10-2019 | 6:26 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையினால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. நிலவும் பலத்த மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதனிடையே , அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் - சிலாபம் - ஆராச்சிக்கட்டு பகுதியில் பெய்த கடும் மழையால் 5 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. சேதங்கள் தொடர்பான விபரங்கள், பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.