385 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

கடற்படையினர் சுற்றிவளைப்பு: 385 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

by Staff Writer 19-10-2019 | 4:01 PM
Colombo (News 1st) கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் 385 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய கேரளக்கஞ்சாவுடன் ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் 164 கிலோகிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவை கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கட்டளை​யை மீறி பயணித்த சொகுசு ரக ஜீப் வண்டியை சோதனைக்குட்படுத்திய போது சந்தேகநபர்கள் வசமிருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மெதகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. இதேவேளை, பருத்தித்துறை கடற்பரப்பில் 221 கிலோகிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவுடன் பயணித்த இரண்டு டிங்கி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். கரையோர காவற்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 3 தொன் நிறையுடைய கேரளக்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது. இதன்போது 169 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.