போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் விடுவிப்பு

மெக்ஸிக்கோவில் கைதான போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் விடுவிப்பு

by Bella Dalima 18-10-2019 | 6:24 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போவின் (El Chapo) மகன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறை வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல் சப்போ எனப்படும் ஜோகுயின் எல் சப்போ கஸ்மனின் (Joaquín El Chapo Guzmán) மகன்களில் ஒருவர் மெக்ஸிக்கோ பாதுகாப்புப் படைகளால் பிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மெக்ஸிக்கோவின் வடக்கு பிராந்தியத்தில் பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன. குலியாக்கன் (Culiacán) நகரில் பொலிஸாரின் வழமையான ரோந்து நடவடிக்கையின் போது ஒவிடியோ கஸ்மன் லோபஸ் (Ovidio Guzmán López) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அங்கு மோதல்கள் இடம்பெற்றமை CCTV காணொளிகளில் பதிவாகியுள்ளது. அக்காணொளியில் ஆயுதங்களை ஏந்திய சிலர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துவதும் வாகனங்கள் தீப்பற்றி எரிவதும் பதிவாகியுள்ளது. வன்முறைகள் தொடராமல் இருப்பதற்காக ஒவிடியோ கஸ்மன் லோபஸை விட்டுவிட்டு பொலிஸார் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.