நெருங்கியவர்களுக்கு அல்ல திறமையானவர்களுக்கே பொறுப்புக்களை வழங்குவோம்: சஜித் பிரேமதாச உறுதி

by Staff Writer 18-10-2019 | 8:15 PM
Colombo (News 1st) நெருங்கிய நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கும் யுகமொன்றுக்கு பதிலாக திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று சுட்டிக்காட்டினார். ''நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வோம், ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்'' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் விசேட மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பின்வருமாறு உரையாற்றினார்,
குடும்பமொன்றுக்கு அடிமைப்பட்ட நாடொன்றை உருவாக்குவதா, இல்லையா என்ற தீர்மானத்தை நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டும். இந்த குடும்பம் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவா நாட்டின் எதிர்காலப் பயணம் தீர்மானிக்கப்படும்? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் எமது தாய் நாட்டின் அரச நிர்வாகத்தின் புதிய அத்தியாயத்தை நாம் உருவாக்குவோம். அரசியல் ரீதியில் நெருங்கிய நண்பர்களின் சங்கங்களுக்கு சலுகைகளை, பதவிகளை வழங்கிய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, தூய்மையான, முறையான அரச நிர்வாகத்தின் ஊடாக நீங்கள் வெற்றிபெறும் தாய் நாட்டை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புச் செய்வோம். இனிவரும் காலங்களில் குடும்பப் பெயர்களுக்காக பதவிகளை வழங்குதல், நெருங்கியவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல் ஆகிய அரசியல் முறைகளை முற்றாக மாற்றுவோம். எமது தாய் நாட்டை பலமான தேசமாக மற்றுவதே எமது நோக்கமாகும்.