யாழ் - சென்னை விமான சேவை முதலாம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் - சென்னை பயணிகள் விமான சேவை நவம்பர் முதலாம் திகதி ஆரம்பம்

by Staff Writer 18-10-2019 | 4:06 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு சில விமான சேவை நிறுவனங்கள் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.M.C.நிமல்சிறி குறிப்பிட்டார். நாளாந்தம் விமான சேவைகளை முன்னெடுக்கவும் இந்த நிறுவனங்கள் இணங்கியுள்ளன. 50 நிமிடம் தொடக்கம் ஒரு மணித்தியாலத்திற்குள் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமானப் பயணம் அமையும் என பணிப்பாளர் நாயகம் H.M.C.நிமல்சிறி கூறினார். இதேவேளை, மேலும் சில விமான சேவை நிறுவனங்களும் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் சேவையை ஆரம்பிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்ட முதலாவது விமானம் இலங்கை நேரப்படி நேற்று காலை 10.15 அளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.