ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஹேமசிறிக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அழைப்பு

by Staff Writer 18-10-2019 | 3:23 PM
Colombo (News 1st) கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஹேமசிறி பெர்னாண்டோ மக்கள் வங்கியின் தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில், வங்கியை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்காக கணினி மென்பொருளை கொள்வனவு செய்தபோது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் ஊழியர்கள் சங்கத்தினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வங்கிக்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.​