பொதுஜன பெரமுன கூட்டத்தில் தாக்குதல்: பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

by Bella Dalima 17-10-2019 | 7:44 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - பெல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெல்மடுல்ல பிரதேச சபை மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் அங்கிருந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் இருவர் பெல்மடுல்ல பிரதேச வைத்தியசாலை மற்றும் கஹவத்த ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எல்.பீ.ஜயந்த கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.