நிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 17-10-2019 | 5:58 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் நிஸங்க சேனாதிபதி எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் ஊடாக அவர் நீதிமன்றத்தில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டார். மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். நிஸங்க சேனாதிபதி நேற்றிரவு 11.30 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MV அவன்ற் கார்ட் எனும் கப்பலில் அனுமதி பத்திரமின்றி 816 தன்னியக்க துப்பாக்கிகள் மற்றும் 2 இலட்சத்து 395 ரவைகளை வைத்திருந்தமை உள்ளிட்ட 7, 573 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நிஸங்க சேனாதிபதி, நாடு திரும்பியவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக கடந்த வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தமைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.