யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

by Staff Writer 17-10-2019 | 6:53 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். இதனடிப்படையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ் விமான சேவைகள், எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை, 2.3 கிலோமீற்றர் வரை புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓடுபாதை விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், விமானக் கட்டுப்பாட்டு அறை மற்றும் பயணிகள் முனையமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்த விமான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.