by Staff Writer 16-10-2019 | 3:33 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் தொடரும் மழையுடனான வானிலையால் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 74 வீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனால் நாளாந்த நீர் மின் உற்பத்தி 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 98.4 வீதம் வரை அதிகரித்துள்ளதுடன், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 97 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
அத்துடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94 வீதம் வரையும் விக்டோரியா 83 வீதம் வரையும் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நீரப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை காணப்படுவதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.
இதனால் பெரும்போகத்திற்கு நீரை வழங்குவது சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.