தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 16-10-2019 | 6:55 PM
Colombo (News 1st) தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆ​ணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரச ஊடகங்களுக்கான இறுதி அறிவித்தலாகவும் இது காணப்படும் என அவர் கூறியுள்ளார். தனியார் ஊடகங்கள் இயலுமானவரை தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை பின்பற்றாத ஊடகங்களை தவிர்த்து, உரிய முறையில் செயற்படும் நிறுவனங்களுக்கு மாத்திரம் உத்தியோகப்பூர்வ முடிவுகளை வௌியிட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடமை நேரத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அரச சேவையாளர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.