அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவது இடைநிறுத்தம்

கொழும்பு குப்பைகள் அறுவைக்காட்டில் கொட்டப்படுவது இடைநிறுத்தம்

by Staff Writer 16-10-2019 | 7:01 AM
Colombo (News 1s) கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவைக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டும் செயற்பாட்டை இன்று (16) முதல் இடைநிறுத்தவுள்ளதாக மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவு தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் ​ரோசி சேனாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் காரணமாக இந்தை் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் மாநகர மேயருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவைக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளைக் கொட்டும் செயற்பாடு தோல்விகரமான திட்டம் என கொழும்பு மாநகர மேயர் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்ததாகவும் மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கழிவகற்றல் செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளக்கூடிய உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டிய கழிவகற்றல் தொகுதியை மூடிய பின்னர், கொழும்பு குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு காணப்பட்ட ஒரே தீர்வு அறுவைக்காடு கழிவகற்றல் திட்டமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.