கோட்டாபயவின் வெற்றிக்காக செயற்படுவதாக மஹிந்தவிடம் வரதராஜ பெருமாள் தெரிவிப்பு

by Bella Dalima 16-10-2019 | 10:09 PM
Colombo (News 1st) தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வரதராஜ பெருமாள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இணைந்த வடக்கு கிழக்கின் முதலமைச்சராக செயற்பட்ட வரதராஜ பெருமாள் இன்று முற்பகல் தமது பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக தமது கட்சி செயற்படும் என இதன்போது வரதராஜ பெருமாள் குறிப்பிட்டுள்ளார். தமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிறந்த வைத்தியசாலை, பாடசாலைகளுக்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததாகவும் பின்னர் அந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார். வடக்கின் பட்டதாரிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்காமையினால், மக்கள் சார்பான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.