IS அமைப்புடன் தொடர்பு: இந்தியாவில் 127 பேர் கைது

இந்தியாவில் IS அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 127 பேர் கைது

by Staff Writer 16-10-2019 | 3:46 PM
Colombo (News 1st) இந்தியாவில் IS அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய IS அமைப்பை சேர்ந்த சிலர் இந்தியாவிலிருந்து செயற்பட்டதை இந்திய தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்ததை அடுத்தே தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றதுடன், அதன் இயக்குனர் கோகேஷ் சந்தர் மோடி, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து விளக்கமளித்தார். நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட 127 சந்தேகநபர்களில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள், சஹ்ரானின் காணொளி உரைகளைக் கேட்டு, தாம் பயங்கரவாத எண்ணத்திற்கு தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.