துருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு

துருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு

by Staff Writer 15-10-2019 | 12:06 PM
Colombo (News 1st) சிரியாவின் வட பிராந்தியத்தில் துருக்கி முன்னெடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு அமைச்சுக்கள் இரண்டின் மீதும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மூவரின் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடைகள் மிகவும் கடுமையானவை எனவும் துருக்கியின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார். உடனடி போர்நிறுத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அல்லது கொண்டுவரப்படும் வரை, இந்தத் தடைகள் தொடரும் என அல்லது மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார். அத்துடன், உடனடியாக போரை நிறுத்துமாறு துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகனிடம் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போர் இடம்பெறும் சிரியாவின் வடக்குப் பகுதிக்கு இயலுமானளவு விரைவாகச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிரியாவின் வட கிழக்கு எல்லைப் பிராந்தியத்திற்குள் சிரிய இராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து, துருக்கி தலைமையிலான படைகளுடன் மோதல்கள் வலுப்பெற்றன. குர்திஷ் தலைமையிலான படைகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரிய இராணுவம் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.