ஜனாதிபதி தேர்தலுக்கான 13 கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து

by Staff Writer 15-10-2019 | 9:45 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான 13 கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 தமிழ் கட்சிகள் நேற்று (14) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் தேசியக் கட்சிகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆறு கட்சிகளும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் நேற்று கையொப்பமிட்டுள்ளார். எனினும் தமது கோரிக்கை பொது ஆவணத்தில் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டத்திலிருந்து வௌியேறியது. எனினும், ஏனைய ஐந்து தமிழ் கட்சிகளும் கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தில் கைச்சாத்திட்டன. பொது ஆவணத்தில் அடங்கியுள்ள கோரிக்கைகளை பல்கலைக்கழக மாணவர்கள், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். அவையாவன,
  • தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனை அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ், இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும்
  • இனப்படுகொலைக்கு முழுமையான பக்கசார்பற்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது, சர்வதேச தீரப்பாயம் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்
  • பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்
  • தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதி கிடைக்க வேண்டும்
  • படையினர் தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வௌியேற்றப்படல் வேண்டும்
  • வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்