வெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு

எல்பிட்டிய தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடன் வழங்குமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 15-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடனடியாக அனுப்புமாறு கட்சி செயலாளர்களுக்கு இன்று (15) அறிவிக்கவுள்ளதாக காலி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைய பெண்களின் பெயர்களும் உள்ளடங்கும் வகையில் குறித்த பெயர்ப்பட்டியலை வழங்குமாறு கட்சி செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், குறித்த பெயர்ப்பட்டியலை அரச அச்சகத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சி 10113 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5273 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றின. இதேவேளை, இந்தத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.