பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 14-10-2019 | 2:37 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்ல, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். முதலாம் கட்டத்தின் கீழ் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இந்தப் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கற்பாறைகள் சரிந்து வீழ்தல், ஊற்று உருவாகுதல், நிலம் தாழிறங்கல் உள்ளிட்ட மண்சரிவுகளுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் குறித்த பகுதிகளிலிருந்து வௌியேறுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.