கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

கிளிநொச்சியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற ஜீப் மீது துப்பாக்கிச் சூடு 

by Chandrasekaram Chandravadani 14-10-2019 | 2:31 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பாரியளவில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிளிநொச்சி பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகளால் இன்று (14) காலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஜீப் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்தபோதும், கட்டளையை மீறி ஜீப் பயணித்துள்ளது. இதன்போது பொலிஸாரால் ஜீப் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன், இதன்போது ஜீப்பில் பயணித்த ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கெப்பித்திகொல்லாவ மதுவரித் திணைக்கள அதிகாரிகளே குறித்த ஜீப்பில் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.