ஜப்பானைத் தாக்கிய சூறாவளி; 23 பேர் உயிரிழப்பு

ஜப்பானைத் தாக்கிய சூறாவளி; 23 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 13-10-2019 | 4:51 PM
Colombo (News 1st) ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், மண்சரிவு மற்றும் வௌ்ளத்தினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாடளாவிய ரீதியில், மீட்புப் பணிகளில் 27000 தன்னார்வத் தொண்டர் படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானில் பலத்த மழை மற்றும் சூறாவளியின் தாக்கத்தை அடுத்து விடுக்கப்பட்டிருந்த அனைத்து வகையான எச்சரிக்கைகளும் நீக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, அனர்த்தங்களுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுடனும் அவசரக்கூட்டம் நடத்தியுள்ளதாக ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி தாக்கியுள்ளதுடன் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹகிபிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி, தற்போது மெதுவாக நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 3 70000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.