பல்கலைக்கழகங்கள் திங்கள் முதல் வழமைக்கு திரும்பும்

பல்கலைக்கழக கட்டமைப்பு திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்

by Staff Writer 12-10-2019 | 3:56 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக கட்டமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (11) நிறைவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் விசேட கூட்டத்தின் போது பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சமன் காரியவசம் குறிப்பிட்டார். தமது சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பரசீலிப்பதற்காக இந்த கூட்டம் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார். சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு 33 ஆவது நாளா நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் யோசனையொன்றை முன்வைக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்தார்.