ஹகிபிஸ் புயலால் ஜப்பானில் விமான சேவைகள் இரத்து

ஐப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயலால் விமான சேவைகள் இரத்து

by Bella Dalima 12-10-2019 | 5:03 PM
Colombo (News 1st) ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்கவுள்ளதால், சுமார் 2000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானை நெருங்கி வரும் ஹகிபிஸ் புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இந்த புயல் கிரேட்டர் டோக்கியோ பகுதி உள்ளிட்ட பசுபிக் கடற்கரையோர பகுதிகளை இன்று மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரை கடக்கும்போது கடுமையான காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோசமான வானிலை நிலவுவதால் சர்வதேச விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 1929 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஹகிபிஸ் புயலானது 1958 ஆம் ஆண்டு 1269 பேரை பலி வாங்கிய இடா புயலைப் போன்று சக்திவாய்ந்ததாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.