அதீத திறமையை வௌிப்படுத்தி வரும் யாழ். மத்திய கல்லூரி அணி

by Staff Writer 12-10-2019 | 8:02 PM
Colombo (News 1st) வடக்கிலிருந்து ஒரு வீரரேனும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தெரிவாக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். அதற்கு உரமூட்டி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அணியாக யாழ். மத்திய கல்லூரியின் 13 வயதிற்குட்பட்டோருக்கான அணி திகழ்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் நூற்றாண்டு பாரம்பரியத்தைக் கொண்டதாக யாழ். மத்திய கல்லூரி விளங்குகின்றது. இந்தக் கல்லூரியின் 13 வயதிற்குட்பட்ட அணி அண்மையில் அரிய சாதனையை நிலைநாட்டி அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கேகாலை மத்திய கல்லூரிக்கு எதிரான 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி 432 ஓட்டங்களைக் குவித்தது. கெவின் ரொக்சன் 287 ஓட்டங்களையும் ஜெவிசன் 142 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பதிலளித்தாடிய கேகாலை அணியை வெறும் 8 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி தமது அதீத திறமையை யாழ். மத்திய கல்லூரி அணி பறைசாற்றியது. கிரிக்கெட் விளையாடுவதற்கு போதுமான வளங்கள் இல்லாத நிலையிலேயே இந்த வீரர்கள் இந்தளவிற்கு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். உரிய வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டால் இவர்களால் நிச்சயமாக எதிர்காலத்தில் இலங்கை அணியில் இடம்பெற்று பல வெற்றிகளை ஈட்டிக்கொடுக்க முடியும் என்பது நம்பிக்கைக்குரியதாகும். வாய்ப்புக் கிடைத்ததன் காரணமாகவே பாகிஸ்தான் மண்ணில் இலங்கையின் இளம் அணி சாதனை வெற்றியை ஈட்டியது. அதுபோலவே யாழ். மத்திய கல்லூரியின் 13 வயதிற்குட்பட்ட இந்த அணிக்கும் தகுந்த ஊக்கமும் உந்துசக்தியும் அளிக்கப்பட்டால் அவர்களால் உலகை வெல்லும் வீரர்களாக உயர முடியும்.