வெளிநாட்டு உடன்படிக்கைகள் தொடர்பில் விஞ்ஞானப்பூர்வ மதிப்பீடு அவசியம்: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

by Bella Dalima 11-10-2019 | 7:46 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, பல்கலைக்கழக தொழில்சார் பிரதிநிதிகள் சிலரை இன்று சந்தித்தார். ''புதிய தலைமைத்துவம் புதிய இலங்கை'' எனும் தொனிப்பொருளில் மன்றக் கல்லூரியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, வௌிநாட்டு வர்த்தக, பாதுகாப்பு மற்றும் அரசியல் உடன்படிக்கைகள் முக்கியமானவை என்றாலும் அவற்றால் நாட்டிற்கு சாதகத்தன்மை காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக ACSA, SOFA, MCC என பலவற்றின் பெயர்களைக் கூறுகின்றனர். பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பில் பரவலாக பேசப்படுகின்றது. அவ்வாறான உடன்படிக்கைகளின் கடன் குறித்து ஆராய வேண்டும். அந்த அனைத்து விடயங்களையும், தனிப்பட்ட விடயங்களை ஒதுக்கிவிட்டு நாட்டை மையப்படுத்தியே ஆராய வேண்டும். உடன்படிக்கைகளில் தனிநபர்கள் கையொப்பமிட்டாலும், அது எமது நாட்டிற்கே தாக்கம் செலுத்தும். ஆகவே, மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக இந்த உடன்படிக்கை குறித்து மதிப்பிடுவதற்கு நாம் முயற்சிக்கும்போது, துறைசார்ந்த உள்நாட்டு பங்குதாரர்களை இணைத்துக்கொண்டு மிகவும் இலகுவாக செலவு மற்றும் இலாபத்தை ஆய்வு செய்ய முடியும். சாதக பாதகம் குறித்து ஆராய முடியும்.
என அவர் மேலும் குறிப்பிட்டார்.