காணாமற்போயிருந்த மீனவர்கள் வீடு திரும்பினர்

சாய்ந்தமருதில் காணாமற்போயிருந்த மீனவர்கள் 21 நாட்களின் பின்னர் வீடு திரும்பினர்

by Staff Writer 11-10-2019 | 5:06 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடற்பரப்பிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்த மீனவர்கள் 21 நாட்களின் பின்னர் இன்று வீடு திரும்பினர். கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சாய்ந்தமருது - மாளிகைக்காடு கடற்பகுதியிலிருந்து ஒரு படகில் மூன்று மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றனர். சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சீனி மொஹமட் ஜூனைடீன், மொஹமட் ஹாரீஸ் மற்றும் காரைத்தீவு பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய மூன்று மீனவர்களுமே கடற்தொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்தனர். மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கடற்படையினர் தேடுதல் நடிவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், தேடுதல் நடவடிக்கை மூலம் மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி கைகூடவில்லை. காணாமற்போன மீனவர்களில் இருவர் தெய்வேந்திரமுனை மீனவர்களால் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர். காரைதீவைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஷ்ணன் என்ற மீனவர் சுகயீனமுற்ற நிலையில் நடுக்கடலில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மீனவரின் சடலத்தை கடலில் வீசியதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர்.