அமெரிக்காவில் 60 பருவநிலை ஆர்வலர்கள் கைது

அமெரிக்காவில் சாலையில் படகை நிறுத்தி போராட்டம்: 60 ஆர்வலர்கள் கைது

by Bella Dalima 11-10-2019 | 6:08 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் சாலையில் படகை நிறுத்தி பருவநிலை மாற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 62 ஆர்வலர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பருவநிலை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் பற்றிய விளைவுகள் குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நியூயோர்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் பகுதியில் நேற்று காலை, பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி பருவநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய சாலையில், ‘உடனே செயற்படு’ என்ற வாசகம் எழுதப்பட்ட பச்சை நிற படகு ஒன்றை நிறுத்தி, ஓரஞ்சு நிற உயிர் காக்கும் மேற்சட்டைகளை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையும் இதே மான்ஹாட்டன் பகுதியில் பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி பேரணி நடத்திய பருவநிலை ஆர்வலர்கள் 90 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.