27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரோஜா ஜோடி

27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரோஜா ஜோடி

by Bella Dalima 10-10-2019 | 3:57 PM
ரோஜா படத்தில் ஜோடியாக நடித்த அரவிந்த் சாமி, மதுபாலா 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனையடுத்து, மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசுரன்’, கள்ளபார்ட் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வௌியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைத் தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அவர் நடித்து வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார். இந்நிலையில், தலைவி படத்தில் மதுபாலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பாலிவுட் படம் ஒன்றிலும் இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.