ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையிலான உடன்படிக்கை கைச்சாத்து 

by Staff Writer 10-10-2019 | 10:56 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இணைவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களால் கையொப்பம் இடப்பட்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (10) கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் மேலும் சில உடன்படிக்கைகள் எட்டப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர், பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.