சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து அமைச்சரவை தீர்மானம்

by Staff Writer 10-10-2019 | 10:33 AM
Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினைகள் காணப்படுமாயின், அது தொடர்பில் ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் யோசனையை முன்வைக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றிரவு (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 32 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்கின்றது. அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.