சிரியாவில் தாக்குதல்களை ஆரம்பித்த துருக்கி

சிரியாவில் தாக்குதல்களை ஆரம்பித்த துருக்கி

by Staff Writer 10-10-2019 | 8:41 AM
Colombo (News 1st) வடக்கு சிரியாவில் துருக்கி தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. குர்திஷ் தலைமையிலான படைகளின் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் ஆட்டிலரி தாக்குதல்களை முன்னெடுத்து ஒரு சில மணித்தியாலங்களில் தரைவழி தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரிய அகதிகளுக்குப் புகலிடமாகக் காணப்படும் பகுதியிலிருந்து குர்திஷ் கிளர்ச்சியாளர்களை அகற்றி பாதுகாப்பான வலயமொன்றை உருவாக்கும் முயற்சியே இதுவென துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், துருக்கியின் இந்த முன்னெடுப்புக்களுக்குக் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம், தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், தாம் பதில் தாக்குதல்களை முன்னெடுப்பதாக அமெரிக்காவினால் உதவி வழங்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைகள் சூளுரைத்துள்ளன. வட கிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கியதன் பின்னர் குர்திஷ்ஷிற்கு எதிரான தாக்குதல்களை துருக்கி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தோற்கடிக்க உதவிபுரிந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் 1000 இற்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.