எல்பிட்டிய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 10-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுபெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டுசெல்லும் நடவடிக்கை இன்று (10) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார். எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து இன்று காலை முதல் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்படுகின்றன. முழுமையான பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட தேர்தலுக்குத் தேவையான ஆவணங்களும் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுசெல்லப்படுவதாகவும் காலி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார். நாளை (11) நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 17 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் 47 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டிடுவதுடன் அவர்களிலிருந்து 28 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் மத்திய நிலையங்களில் இன்று காலை முதல் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். ஒரு வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.    

ஏனைய செய்திகள்