by Staff Writer 09-10-2019 | 1:14 PM
Colombo (News 1st) ஹபரணை - திகம்பத்தஹ, தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமைக்கு உடலில் நஞ்சு கலப்பட்டமையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தம்மால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
உடலில் நஞ்சு கலக்கப்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக குறித்த குழு மேற்கொண்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், யானைகளின் உடல்களில் எவ்வகையான இரசாயனப் பொருள் கலந்துள்ளது என்பதை கண்டறிவதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, யானைகளின் உடல்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழக மிருகவைத்திய பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யானைகளின் உயிரிழப்பு தொடர்பில் விரைவாக அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளதாக இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.