மதுமாதவவின் கருத்தால் பிவிதுரு ஹெல உருமயவிற்கு நெருக்கடி

by Staff Writer 09-10-2019 | 8:56 PM
Colombo (News 1st) உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமயவின் உப தலைவர் மதுமாதவ அரவிந்தவின் கருத்து, அரசியல் மேடையில் தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து தொடர்பில் உதய கம்மன்பில உடனடியாக தௌிவூட்ட வேண்டும் என பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது. உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமய கட்சி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில், கட்சியின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த அண்மையில் தெரிவித்த கருத்தொன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகியதை அடுத்து, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சிங்கள அம்மா மாரே இன்று கறுப்பு ஆடை அணிந்து இவர்களின் மரக்களத்தன்மையை காண்பித்து செல்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் வாக்குகள் காரணமாக இதற்கு எதிராக கதைக்க முடியாது. இதனாலேயே நாம் அதனை எதிர்க்கின்றோம். நாம் அவற்றை கலைவதற்காகவே வந்தோம். இந்த நாட்டில் சிங்களவர்கள், இறுதி சிங்களவன் சுவாசிக்கும் வரை நீ இங்கு ஷரியா செய்ய இடமளியோம். கோட்டாபய ராஜபக்ஸ உருவாக்கும் புதிய உலகில் 10 வருடங்கள் சிங்களம் தொடர்பில் கதைப்பதற்கான வலிமையை தருமாறு மாத்திரமே நாம் கோருகின்றோம்
என மதுமாதவ அரவிந்த குறிப்பிட்ட கருத்தே தற்போது நெருக்கடி நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. இது தொடர்பில் பொதுஜன பெரமுன கடும் கண்டனம் வௌியிட்டதுடன், பிவிதுரு ஹெல உருமயவின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்ததாக மதுமாதவ அரவிந்த ஊடகங்களுக்கு இன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சியின் விம்பத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த கருத்து தொடர்பில் பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கடும் நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதய கம்மன்பில இன்று பங்கேற்கவில்லை.