முல்லைத்தீவில் விபத்தில் மாணவர் பலி

by Staff Writer 08-10-2019 | 5:53 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்ற 11 வயதான இரண்டு மாணவர்களே விபத்தை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மீன் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வாகனமொன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. வாகன சாரதி தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர தாமதமானமை தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பதில் நீதவான் S.கங்காதரன் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.