by Staff Writer 08-10-2019 | 3:47 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலத்திற்கு தயாரிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதிரி வாக்குச்சீட்டு அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்குச்சீட்டின் அசாதாரண நீளம் காரணமாக, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆகவும், வாக்கெண்ணுபவர்களின் எண்ணிக்கை 175 ஆகவும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் நிமித்தம் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்குச்சாவடி மற்றும் உதவி ஊழியர்களை அதிகரிக்க வேண்டியேற்படுமெனவும் அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்கள் அதிகரிக்குமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.