கோட்டாபயவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்த இருவருக்கு அச்சுறுத்தல்: பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

by Staff Writer 08-10-2019 | 7:52 PM
Colombo (News 1st) தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி இவர்கள் இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர பின்வருமாறு தெரிவித்தார்,
தாக்குதல் மற்றும் வௌ்ளை வேன் ஆகியவற்றை நினைவுபடுத்தல், வியங்கொட என்ற பெயருக்குப் பதிலாக எக்னெலிகொடவின் பெயரை நினைவுபடுத்தல் ஆகிய விடயங்கள் எனக்கும் காமினிக்கும் எதிராக இடம்பெறுகின்றன. இயற்கை உயிரிழப்பு கிடைக்காமை குறித்து கவலையடைவதாகவும் கூறப்படுகின்றது. நாம் முன்னெடுக்காத மற்றும் எம்மால் பதிலளிக்க முடியாத விடயங்கள் குறித்து அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர். பிரஜைகளின் உரிமைக்காகவே நாம் செயற்பட்டோம். அந்தப் பிரஜைக்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், அதனை நீதிமன்றத்திலோ அல்லது வேறு எங்குமோ கேட்க முடியும். நாம் நீதிமன்றத்தை நாடியமை குறித்தே இங்கு பிரச்சினையுள்ளது. நாம் நீதிமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுள்ளது. அதற்கு நீதிமன்றம் பதில் வழங்கியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்வதில்லை.