ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 2 முறைப்பாடுகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 2 முறைப்பாடுகள்

by Staff Writer 08-10-2019 | 11:43 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு தற்போது 2 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எதிர்வரும் 14 ஆம் திகதி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் M.M.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முதலாம் மாடி, 5ஆம் மண்டபம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌதாலோக்க மாவத்தை, கொழும்பு - 7 என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும். இதேவேளை, 011 2 677 673 என்ற Fax இலக்கத்தினூடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். அதிகாரத் துஷ்பிரயோகம், பொருட்படுத்தாமை, பின்வாங்குதல், பொறுப்புணர்ந்து செயற்படாமை உள்ளிட்ட காரணிகளால் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய கோட்பாடாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை நடாத்துதல், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் ஆராய்வதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.