அனைத்து மக்களையும் வாழ வைக்கும் அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்துள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

by Staff Writer 08-10-2019 | 9:13 PM
Colombo (News 1st) 'மக்களின் வெற்றிக்கான இடதுசாரி பலம்' எனும் தொனிப்பொருளில் ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட மாநாடு மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, அனைத்து துறைகளிலும் உள்ள மக்களை வாழ வைப்பதற்கான பொருளாதாரத் திட்டத்தை தாம் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார். மக்களிடையே சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளைத் தயாரித்துள்ளதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.