சுதந்திரக் கட்சியின் சந்திப்பு பிற்போடப்பட்டது

இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் சுதந்திரக் கட்சியின் இன்றைய சந்திப்பு பிற்போடப்பட்டது

by Staff Writer 06-10-2019 | 1:41 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை இந்தக் கூட்டம் நடைபெற்றதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாக கூட்டத்தின் பின்னர், கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்று முற்பகல் நடைபெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஊடவியலாளர் சந்திப்பு மீண்டும் நடைபெறும் தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.