பிச்சை எடுத்து கோடீஸ்வரியான லெபனான் பெண்மணி

பிச்சை எடுத்து கோடீஸ்வரியான லெபனான் பெண்மணி

by Bella Dalima 05-10-2019 | 10:43 PM
லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கிக் கணக்கில் சுமார் 900,000 டொலர்களை (இலங்கை ரூ.163,347,429) சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாபா முகமது அவத். இவர் தான் பிச்சை எடுக்கும் பணத்தை வங்கியில் போட்டு வந்துள்ளார். இந்த நிலையில், JTB எனும் குறித்த வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததையடுத்து, அந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. இந்த வங்கியில் வைப்பிலிடப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்திற்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி அளித்தது. அவர்களுக்குரிய பணம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உறுதியளித்தார். அந்த வகையில், ஹஜ் வாபா முகமது அவத்துக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3.3 பில்லியன் லெபனான் பவுண்டுக்கான (சுமார் 900,000 டொலர்கள்) 2 காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுபற்றி ஹஜ் வாபா முகமது அவத் பிச்சையெடுத்து வந்த மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்,
ஹஜ் வாபா முகமது அவத் பிச்சைக்காரி என்றே நினைத்திருந்தோம். கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில் தான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை இந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் கோடீஸ்வரி என்ற செய்தி வெளியானது மூலம் அவர் இந்த நகரம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்