பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை தொடர்பில் சந்தேகம்

பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை: விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை

by Bella Dalima 03-10-2019 | 7:45 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (02) காலை பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரனைகளை ஆரம்பிக்குமாறு குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே நேற்று அதகாலை 5 மணிக்கு குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும், பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு கூறப்பட்டுள்ளது. சிசேரியன் மூலம் குழந்தையைப் பிரசவிக்க தாம் கோரிய போதும், வைத்தியசாலை தரப்பில் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், பிறந்த குழந்தையின் தலையில் காயம் காணப்படுவதாகவும் குழந்தையை வைத்தியசாலை ஊழியர்கள் அட்டைப் பெட்டியில் வைத்து கழிவறையில் போட்டிருந்ததை தாம் கண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 5 வருடங்களாகக் காத்திருந்து தமக்கு கிடைத்த குழந்தையை தம்மிடம் சடலமாகத் தந்துள்ளதாக குழந்தையின் தந்தை குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் க.கலாரஞ்சனியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. இது தொடர்பில் பணிப்பாளர் மட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் கண்டறிய முடியும் எனவும் அவர் பதிலளித்தார். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.