பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாரியளவில் வெற்றி பெறுவோம்: கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 02-10-2019 | 8:36 PM
Colombo (News 1st) ஜனநாயக ரீதியில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்துகொண்டு பல்வேறு சூழ்ச்சிகர நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், தம்மால் நிச்சயமாக பாரிய வெற்றியைப் பெற முடியும் என நம்புவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா மகஜன கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த மகஜன கட்சி மாநாட்டில், தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொலிஸாருக்கு வழங்கவுள்ள சலுகைகள் தொடர்பிலும் கோட்டாபய ராஜபக்ஸ தெளிவுபடுத்தினார். பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனுபவம் வாய்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அத்தியட்சகர் ASP பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக இதன்போது அவர் உறுதியளித்தார்.