அரச அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 02-10-2019 | 7:28 AM
Colombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் கடந்த 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவிருந்த 2 பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஆகியன தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன. தமது சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை பரிசீலித்ததன் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடும் தீர்மானத்தை எடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பளப் பிரச்சினைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால் இன்று முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ரயில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்களை சேர்ந்த ஊழியர்கள் இன்று 7ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெற்றபோதிலும் தமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காதமையால், பணிப்புறக்கணிப்பை தொடர்வதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார். மக்களையும் ரயில் ஊழியர்களையும் மேலும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது, தமது பிரச்சினைகளுக்காக தீர்வை உடனடியாக பெற்றுத்தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் 23ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இன்றைய தினம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.