கமல் சம்மதித்தால் தேவர் மகன் 2-ஐ இயக்குவேன்

கமல் சம்மதித்தால் தேவர் மகன் 2-ஆம் பாகத்தை இயக்குவேன்: சேரன்

by Bella Dalima 01-10-2019 | 4:19 PM
தேவர் மகன் 2-ஆம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்கத் தயார் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றிப்படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3 ஆவது சீசனில் சேரன் போட்டியாளராகக் கலந்துகொண்டது மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், தான் போட்டியில் கலந்துகொண்டதற்கு நடிகர் விஜய்சேதுபதி தான் காரணம் எனவும் அவரின் ஆலோசனையின் பேரில் தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சேரன்,
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல் ஹாசனிடமும் தெரிவித்து விட்டேன்.
என்று குறிப்பிட்டார்.