பிலிப்பைன்ஸில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பிலிப்பைன்ஸில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு

by Bella Dalima 01-10-2019 | 4:04 PM
Colombo (News 1st) ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகளை பிலிப்பைன்ஸ் அரசு கொன்று குவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து, நோய் ஏற்படக் காரணமான பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸின் விவசாயத்துறை அதிகாரி வில்லியம் தார் கூறுகையில்,
பன்றி பண்ணைகள் சரியாக பரமரிப்பு இல்லாமல் இயங்குவதே நோய் பரவுவதற்கு முக்கிய காரணம். தற்போதைய நிலவரப்படி, 20,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றில் 6,600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவை. மீதம் உள்ள பன்றிகள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொல்லப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புலாகான் மாகாணத்தில் இருந்து அதிக பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன
என்றார். பிலிப்பைன்ஸில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு 1-7-10 என்ற நெறிமுறையை செயற்படுத்துகிறது. அதாவது பாதிக்கப்பட்ட பண்ணைகளின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளையும் அகற்றுதல், 7 கிலோமீட்டர் சுற்றளவில் பன்றிகளின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல், 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகள் நோய் குறித்த கட்டாய அறிக்கையை சமர்ப்பித்தல் என்பன நெறிமுறையில் அடங்கும்.