அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

by Staff Writer 30-09-2019 | 3:26 PM
Colombo (News 1st) கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அங்கவீனமுற்ற இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்பதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்ததாக இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் U.D. வசந்த தெரிவித்துள்ளார். கடந்த 20 நாட்களாக இவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஒய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (30) முற்பகல் சந்தித்திருந்தார். இராணுவத்தினருக்கான சேவைகளை இயன்றளவு செய்யும் தான், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவையில் நாளை கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் சிறந்த தீர்வொன்றைப் பெற்றதன் பின்னர் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை சந்திக்க தயார் என அமைச்சர் கூறியுள்ளார்.