by Staff Writer 29-09-2019 | 7:51 AM
Colombo (News 1st) நாளை (30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த பொது நிர்வாக அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
சில காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பும் நடைபெறவுள்ளதால், அதற்கு இடமளிக்கும் வகையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அறிக்கையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் தமது தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சிறந்த தீர்வு எட்டப்படாவிடின், புதன்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.